திருகோணமலையில் கங்கையில் குதித்த நபரை இரண்டாவது நாளாகவும் தேடும் பொலிஸார்!!

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கை கண்டக் காட்டு பாலத்துக்கு அருகில் நேற்று மண் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்ய முற்பட்ட வேளையில், அவர்கள் தப்பிச் செல்ல முற்பட்ட போது கடற்படையினரினால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த மூன்று பேரும் தப்பிச் செல்வதற்காக கங்கையில் குதித்த வேளை இருவர் காணாமல் போயிருந்தனர். ஒருவர் உயிர் தப்பியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறான நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் காணாமல்போன இருவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதுடன், ஒருவரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது நாளாகவும் இன்று சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் காணாமல் போனதாக கூறப்படும் மற்றொரு இளைஞரை தேடும் பணியில் பொதுமக்களும், கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.