50 கோடி சொத்துக்காக 48 வயது பெண்ணுடன் திருமணமா? அதிர்ச்சியான தகவல்..!

கேரளாவில் பத்திரிக்கை ஒன்றில் திருமண வாழ்த்து பகுதியில் ஒரு தம்பதியின் புகைப்படம் வெளியானது. மணப்பெண் ஜூபி ஜோசப், செம்பந்தொட்டியை சேர்ந்தவர். மணமகன் அனூப் செபஸ்டின், செருபுழாவை சேர்ந்தவர். இருவருக்கும் கடந்த 4ம் தேதி திருமணம் நடந்தது. இந்த திருமணம் பெற்றோர்கள் ஏற்பாடு செய்து நடந்துள்ளது.

வாட்ஸ் ஆப்பில் வதந்தி
இந்த புகைப்படத்தில் மணமகனை விட மணமகள் மிக குண்டாக இருந்ததுடன், சற்று வயதான தோற்றத்தில் தெரிகிறார். இதனையடுத்து இவர்களது புகைப்படத்துடன் வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி உலா வரத்தொடங்கியது. ஜூபி ஜோசப்பிற்கு 48 வயதாகிறது, இதனால் மாப்பிள்ளைக்கு 101 சவரன் நகை, ரூ.50 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மணப்பெண்ணுக்கு ரூ.50 கோடி மதிப்பு சொத்துகள் உள்ளது. வரதட்சணை மற்றும் சொத்து காரணமாக தான் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை 25 வயது வாலிபரான அனூப் திருமணம் செய்து கொண்டார் என வாட்ஸ்அப்பில் செய்தி பரவ தொடங்கியது.

கடைசியாக இந்த பார்வர்டு செய்தி மணமக்களின் வாட்ஸ்அப்பிற்கும் வந்தது. மகிழ்ச்சியில் இருந்த புதுமண தம்பதியர் இந்த செய்தியால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகினார்கள். உறவினர்களும் நண்பர்களும் இது குறித்து தொலைபேசியில் விசாரிக்க புதுமண தம்பதி நொந்துபோயினர். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளனர்.

உண்மையில் மணப்பெண் ஜூபிக்கு 27 வயது மற்றும் மணமகன் அனூப்பிற்கு 29 வயதாகிறது. அனூப் சண்டிகரிலும், ஜூபி ஷார்ஜாவிலும் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு இடையே பெரிய அளவிலான வயது வித்தியாசம் இல்லை. இருவரும் விருப்பப்பட்டுத்தான் திருமணத்திற்கு சம்மதித்துள்ளனர். ஆனால் அடையாளம் தெரியாத யாரோ ஒருவர் பரப்பிய வதந்தி வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியுள்ளது.

அந்த நபரை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என தம்பதியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து தவறான தகவல் பரப்பியதாக வின்செண்ட், முத்தாதில், பிரேமானந்தன், ராஜேஷ், சைஜூ, சுரேந்திரன் ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.