மன்னாரில் பெரும் தீ!! பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் நாசம்..

மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள அபான்ஸ் விற்பனை நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக குறித்த விற்பனை நிலையத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மின் சாதனப்பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

விற்பனை நிலையம் வழமை போல் இன்று இரவு மூடப்பட்டுள்ள போதும் இரவு 9 மணியளவில் குறித்த விற்பனை நிலையத்தினுள் திடீர் என தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அருகில் உள்ள வர்த்தகர்களும்,மக்களும் இணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு,மன்னார் காவல்துறையினருக்கும் தகவல் வழங்கினர்.

மன்னார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்ததோடு,மக்களை குறித்த பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.என்பதுடன் நீண்ட நேரமாகியும் தீயை கட்டுப்படுத்த காவல்துஐறயினர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

வர்த்தகர்களும்,மக்களும் இணைந்து தீ ஏற்பட்ட குறித்த அபான்ஸ் விற்பனை நிலையத்தின் பின் பகுதியில் இருந்து பௌசர் மூலம் கொண்டு வரப்பட்ட நீரை பயண்படுத்தி தீயை அணைக்க முற்பட்டனர்.

எனினும் குறித்த விற்பனை நிலையத்தின் கீழ் பகுதி மற்றும் மேல் மாடியிலும் தீ பரவியது.இதனைத் தொடர்ந்து வவுனியா தீ அனைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து இரவு 10.30 மணியளவில் வவுனியாவில் இருந்து மன்னாருக்கு வருகை தந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் நீண்ட நேரத்தின் பின் குறித்த தீ இரவு 11.45 மணியளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. குறித்த தீ பரவலின் காரணமாக குறித்த அபான்ஸ் விற்பனை நிலையத்தில் உள்ள பல இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய மற்றும் பழைய மின் சாதனப்பொருட்கள் தீயில் எரிந்து சாம்பளாகியுள்ளது.

குறித்த தீப்பரவல் மின் ஒழுக்கின் காரணமாக ஏற்பட்டதா அல்லது திட்டமிட்ட நாசகாரிய செயலா? என்பது தொடர்பில் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எனினும் குறித்த தீ பரவல் தொடர்பில் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.மேலும் குறித்த அபான்ஸ் விற்பனை நிலையத்திற்கு கணக்கு ஆய்வுக்குழுவினர் வருகை தந்து சோதனைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் பின்னரே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மேலும் மன்னாரில் தீ அணைப்பு பிரிவு இருந்திருந்தால் குறித்த தீப்பரவலை உடனடியாக கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மன்னார் நகர முதல்வர் ஞ.அன்ரனி டேவிட்சன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன்,செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருட் சமூகமளித்திருந்தனர்.

கடந்த வாரம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னருக்கு அவசரமாக தீ அனைப்பு வாகனம் உள்ளடங்களாக அதற்கான தனிப்பிரிவு மன்னாருக்கு தேவை என பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய நிலையில், பிரதமதர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக மன்னாரிற்கு தீ அணைப்பு வாகனம் உள்ளடங்களாக தனிப்பிரியை ஏற்படுத்தி தருவதாக பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.