விடுதலைப்புலிகளின் தலைவரை கொலை செய்ய தீட்டிய சதியும் தலைவரின் சாமர்த்தியமும்! நடந்தது என்ன??

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைப்பற்றும் அல்லது கொலை செய்யும் நோக்கத்தோடு வன்னிக்காடுகளுக்குள் தமது படை நடவடிக்கைகளை தொடங்கியிருந்தார்கள் இந்திய அமைதி காக்கும் படையினர்.

அந்தப் படை நடவடிக்கைகக்கு இந்தியப் படையினர் சூட்டியிருந்த பெயர் ‘ஆப்பரேஷன் செக் மேட்'(Operation Checkmate).

‘செக் மேட்’ என்கின்ற வார்த்தை சதுரங்க(CHESS) விளையாட்டில் உபயோகிக்கப்படுவது வளக்கம்.

சதுரங்க விளையாட்டின் இறுதியாக ஒருதப்பில் உள்ள ராஜாவுக்கு எதிரி குறிவைத்து, அந்த ராஜா நகர முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்படும் சந்தர்ப்பத்தை ‘செக்மேட் ‘(CHECK-MATE) என்று கூறுவார்கள்.

விடுதலைப்புலிகளின் தலைவரும் எங்குமே நகர முடியாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டதாகவும், இந்தியப் படையினரின் கைகளில் அகப்படுவதைத் தவிர அவருக்கு வேறு எந்த வழியுமே இல்லை என்பதை வெளிப்படுத்தவே இந்த படை நடவடிக்கைக்கு இப்படியான ஒரு பெயரை இந்தியப் படைத்துறைத் தலைமை சூட்டியிருந்தது.

‘புலிகளின் தலைவர் ஒன்று தம்மிடம் சரணடைய வேண்டும்…, அல்லது சயனைட்டை உட்கொண்டு தற்கொலை செய்யவேண்டும்… இரண்டையும் தவிர அவருக்கு வேறு வழியே கிடையாது’
என்று இந்தியப் படைத் தளபதிகள் இந்திய அரசியல் தலைமைக்கு அறிவித்திருந்தார்கள்.

அந்த அளவிற்கு புலிகளின் தலைமையை நோக்கி முற்றுகைகள் இறுகியுள்ளதாக அவர்கள் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்கள்.

புலிகளின்தலைவரைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட அந்த முற்றுகைகளில் இந்தியாவின் விமானப்படை, கடற்படை மற்றும் இந்திய இராணுவம் என்பன முழுப்பலத்துடன் இறக்கப்பட்டிருந்தன.

இந்தியப்படையினர் புலிகளின் தலைமை மீதான தமது சுற்றிளைப்பை ஒன்றன் பின் ஒன்றாக மூன்று அடுக்கு வளையங்களாக அமைத்திருந்தார்கள்.ஏதாவது ஒரு வளையத்தினுள் புலிகளின் தலைவர் சிக்கியேயாகவேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருந்தார்கள்.

அந்தச் சுற்றிவளைப்பின் போது விடுதலைப் புலிகளின் நிலையும் சற்று சிக்கல் நிறைந்ததாகவே இருந்தது.

வன்னியின்அடர்ந்த காடுகளின் நடுவே நித்திகைக்குளம் என்கின்ற காட்டுப் பிரதேசத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களும் சில நூறு போராளிகளும், சுமார் இருபதினாயிரம் இந்தியப் படையினரின் சுற்றிவளைப்பின் நடுவே அகப்பட்டிருந்தார்கள்.

புலிகளின்தலைவர் பிரபாகரன் அவர்களைக் குறிவைத்து இந்தியப் படையினர் மேற்கொண்ட அந்த நித்திகைக்குள முற்றுகை பற்றியும் அந்த முற்றுகை நடவடிக்கையின் பொழுது இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சில சம்பவங்கள் பற்றியும், அந்தக் காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சில இரகசியச் சதிகள் பற்றியும்தான் இந்தத் தொடரில் விரிவாக நாம் பார்க்க இருக்கின்றோம்.

அது ஒரு இக்கட்டான காலப்பகுதி.

வன்னியை வளைத்து இந்தியப் படையினர் நிலைகொண்டிருந்தனர். சிறுசிறு முகாம்கள், பாரிய தளங்கள், ரோந்துக்கள், வீதி உலாக்கள், சுற்றிவகைப்புகள், வான் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள் என்று புலிகளின் தலைவரைக் குறிவைத்து நிறைய நகர்வுகள் இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்தன.இத்தனைக்கும் மத்தியில் புலிகளின் தலைவர் தனது புலிப் போராளிகளுடன் இணைந்து வீர யுத்தம் புரிந்துகொண்டிருந்தார். எத்தனையோ விதமான நெருக்குதல்களைச் சமாளித்தபடி அவரது போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

புலிகளின் தலைவரையும், மற்றய இடங்களில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்த கெரிலாக்களையும் பிரிக்கும் முகமாக பல நகர்வுகளை இந்தியப் படையினர் எடுத்திருந்தார்கள். அப்படியும் அவர்களால் புலிகளின் போராட்ட வீச்சினை சிறிதும் தனிக்கமுடியாமல் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைவரை ஒழித்துக்கட்டுவதன் மூலம்தான் புலிகளின் போராட்டப் பலத்தைச் சிதைக்கமுடியும் என்ற தீர்மானத்திற்கு வந்த இந்தியப் படையினர், அந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு Operation Check-Mate என்ற பாரிய அந்தப் படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்கள்.

வன்னி, மணலாற்று (வெலியோயா) காடுகளில் மறைந்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பூண்டோடு ஒழித்துவிடுவதே அந்தப் படை நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது.

முப்படைகளின் தளபதிகளுக்கும் இச்செய்தி கிடைக்கின்றது.

‘முற்றுகையை மேலும் இறுக்குங்கள்…’ ‘…எவ்வழியாகிலும் பிரபாகரன் தப்பிடாது பார்த்துக்கொள்ளுங்கள்…’ ‘…தேவையானால் அவரைக் கொல்லவும் தயங்கவேண்டாம்….’ என்று முப்படைகளின் தளபதிகளிடம் இருந்து களத்திற்கு உத்தரவுகள் பறந்தவண்ணம் இருந்தன.

களத்தில் வகுப்கபட்ட திட்டங்களை இந்தியாவில் இருந்த படைத்துறைத் தளபதிகள் மேலும் கூர்மையாக்க ஆரம்பித்தார்கள்.

மன்னார், வவுனியா, கிளிநொச்சிப் படைத்தளங்களில் இருந்து மேலும் பத்தாயிரம் படையினர் நிதிகைக்குள முற்றுகைக்கு வலுச்சேர்க்கும்படிக்கு அனுப்பபட்டார்கள்.இருபதுக்குமேற்பட்ட வான் ஊர்த்திகள்,பதினைந்திற்கு மேற்பட்ட குண்டு வீச்சு விமானங்கள்,சுமார் ஐந்து வேவு விமானங்கள்,முல்லைத்தீவு-திருகோணமலை கடல் எல்லையைக் காவல் செய்தவாறு சுமார் எட்டுப் போர்க்கப்பல்கள்,இருபதுக்குமேற்பட்ட அதிநவீன தாக்குதல் விசைப் படகுகள் -தாக்குதலுக்கு தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

இவற்றைவிட1000 மராத்திய அதிரடிப் படையினரும், 1000 குர்க்கா அதிவிசேட அதிரடிப் படையினரும் அச்சுற்றிளைப்புப் பிரதேசத்திற்குள் விரைந்து அனுப்பிவைக்கப்பட்டார்கள். இந்தச் செய்தி இந்திய அமைதிப்படையின் தளபதி ஊடாக இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வான் அலை மூலம் ஆனுப்பிவைக்கப்பட்டது. ராஜீவுக்கோ சொல்லமுடியாத சந்தோசம். ஈழத்தமிழர் விடயத்தில் தமக்குப் பிடித்த தலையிடி இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தீர்ந்துவிடும் என்ற நிம்மதிப் பெருமூச்சு அவரிடம் இருந்து வெளிப்பட்டது.

‘அங்கு என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது…. கள நகர்வுகள் என்ன…. முடிவுகள் என்ன…’ – என்று தனக்கு ஒவ்வொரு அரை மணி நேரமும் அறிவிக்கும்படி ராஜீவ் காந்தி படைத்தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.தனது மற்றைய வேலைகள் அனைத்தையும் இரத்துச் செய்யும்படி தனது உதவியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

‘புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்தியப் படையினரால் கைப்பற்றப்பட்டுவிட்டார் அல்லது கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தியை உலகிற்கு அறிவிக்கும் அந்த தருணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி காத்துக்கொண்டிருந்தார்….

தொடரும்…

– நன்றி ibc Tamil –