பாடசாலை சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள் ! பெற்றோர்கள் விசனம்

வவுனியா – பண்டாரிக்குளம் விபுலானந்தக் கல்லூரியின் பிரதான மதில் சுவர்களில் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்களினால் காதலர் தினமான இன்று சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள் எழுதப்பட்டுள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி ஒழுக்கமான பாடசாலை சமூகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாடசாலை அதிபரிடம் காணப்படுகின்றது.

எனவே இவ்வாறான பாடசாலை மாணவர்களுக்கு எதிராக பாடசாலை அதிபரினால் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இன்று காதலர் தினமானதால் பிரதான வீதிகளில் குறிப்பாக பாடசாலை செல்லும் வீதிகளில் வர்ணப்பூச்சினால் காதலர் தினத்தையொட்டிய காதல் சின்னங்கள், வார்த்தைகள் வசனங்கள் எழுதப்பட்டுள்ளது.

இதேவேளை பண்டாரிக்குளம் விபுலானந்தாக்கல்லூரியின் பாடசாலை மதிலில் வர்ணப்பூச்சினாலும் வெண்கட்டிகளாலும் காதலர் தினவாழ்த்துகள் எழுதப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

இவ்வாறு பாடசாலையின் மதிலில் குறிப்பாக அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களினால் பாடசாலையின் மதில் கேலிக்கூத்தாக மாற்றப்பட்டுள்ளதையிட்டு அவ்வீதியால் செல்லும் பெற்றோர்கள், பழைய மாணவர்களுக்கு பாடசாலை மீதுள்ள நம்பிக்கைக்கு அவ நம்பிக்கையை மேலும் ஏற்படுத்தியுள்ளது.

ஒழுக்கத்துடன் கல்வியைக் கற்பதற்காக பாடசாலை செல்லும் மாணவர்களை இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கு இடமளிக்காது பாடசாலை சமூகத்தினால் ஒழுக்கமான மாணவ சமுதாயத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் இவ்வாறான சமூகச்சீரழிவுகளை பாடசாலைகளிலிருந்து ஆரம்பிக்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளியிட வேண்டிய பொறுப்பு கல்வியியலாளர்களிடம் காணப்படுவதாகவும் பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.