சனிப்பெயர்ச்சியால் ராசிக்காரர்களுக்கு நடக்கக்கூடிய சங்கடங்கள்

ஒருவரது ஜாதகத்தில் சனி நல்லநிலையில் இருக்கும்போது தனது காரகத்துவங்களின் வழியாக அபரிமிதமான வருமானங்களைத் தருவார்.

இவரின் வலுவைப் பொறுத்து ஒருவருக்கு வருமானம் அமையும். ஜாதகத்தில் சனி வலுப்பெற்றவர்கள் கறுப்பு நிறப் பொருள்கள் மேல் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். கறுப்பு சம்பந்தப்பட்ட பொருள்களில் அவர்களுக்கு லாபம் வரும்.

கோள்சாரத்தில் வரும் அஷ்டம சனியும், ஏழரைச் சனியும் தனிமனித வாழ்க்கையில் முக்கியமானவை. அஷ்டம சனி என்பது ஒருவருக்கு சுமாராக இரண்டரை வருடம் முதல் மூன்று வருட காலங்களுக்கு நடக்கும். ஏழரைச் சனி என்பது ஏழரை வருடம் முதல் எட்டு வருடங்கள் தொடரும்.

அஷ்டம சனியின் பாதிப்பினால் வருமானம் இல்லாத நிலை, எதிலும் தோல்வி, வம்பு, வழக்கு, வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நிம்மதியற்ற தன்மை, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்று பிழைத்தல் போன்றவை நடக்கும்.

ஏழரைச் சனியின் காலங்களில் ஒருவர் நல்லது எது, கெட்டது எது, நண்பர் யார், சுற்றியுள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது போன்ற அனுபவங்களைப் பெறுவார். அவரவர் வயது, வாழ்க்கை முறை, இருக்கும் இடம் போன்றவற்றைப் பொறுத்து பலன்கள் நடக்கும்.

ஏழரைச் சனி ஆரம்பிப்பதற்கு ஒரு வருடம் அல்லது சில மாதங்களுக்கு முன்பாக ஒருவரைத் தொழில் ஆரம்பிக்க வைத்து, ஆரம்பித்ததும் சிக்கல்களை உண்டாக்கி பணத்தை இழக்க வைத்துவிடும். புலி வாலைப் பிடித்த கதையாகத் தொழிலை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் சிக்கலான அனுபவங்களைத் தருவார்.

நடுப்பகுதியான ஜன்மச் சனி எனப்படும் சொந்த ராசியில் அமரும்போது கடுமையான மன உளைச்சல்களைத் தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். அதிலும் ஜன்ம நட்சத்திரத்தில் செல்லும்போது எதிர்மறையான வழிகளில் வாழ்க்கையின் இன்னொருப் பக்கத்தை புரிய வைப்பார். சுயநட்சத்திரத்தில் செல்லும் சனியால் வாய்விட்டு அழக்கூடிய சம்பவங்கள் நடக்கும்.