விடுதலைப்புலிகள் மீண்டும் வந்து சமத்துவத்தை நிலைநாட்டவேண்டுமா?

இலங்கை நாடானது தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்களோடு இணைந்து 19 இனகுழுக்களை கொண்டிருக்கிறது. ஆனால் அது அதிகாரபூர்வமாக அறிவிக்கபடவில்லை. சிங்களவர்கள் 75 வீதம் இருக்கலாம் அல்லது 99 வீதமாக இருக்கலாம் ஆனால் அது 100 வீதமாக மாறமுடியாது. 75 உடன் 25 இணைந்தால் தான் 100 வீதமாகமுடியும். அது தான் இலங்கை நாடாக இருக்கமுடியும். இதனை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும் என தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்றயதினம் நடைபெற்ற அகதேசிய முற்போக்கு கழகத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி கூறினார்.

மேலும் தெரிவித்த அவர்,

இலங்கையின் அனைத்துப்பகுதியிலும் வசிக்கும் தமிழ்மக்கள் ஒன்று சேர்ந்தால் தான் ஈழத்தமிழர்கள் என்ற உண்மையான தமிழ்த்தேசிய இனம் உருவாகும். அதன்மூலமே எமது அடையாளத்தையும் இருப்பையும் நாங்கள் அறிவிக்கமுடியும். தமிழ்பேசும் மக்கள், எண்ணிக்கையில் பெரும்பான்மையான சிங்களமக்களிடம் சமத்துவம் வேண்டும் என்று காதுகிழிய கத்துகிறோம் அதே அளவு சமத்துவத்தை எங்களிற்குள்ளே நாங்கள் ஏற்படுத்திகொள்ளவேண்டும்.

எங்களிற்குள்ளே நாம் எம்மை தாழ்திவைத்துக்கொண்டிருப்போமானால் பெரும்பான்மையான சிங்களமக்களிடம் சம உரிமையை தாருங்கள் என்று கேட்பதற்கான தார்மீக உரிமயை நாம் இழக்கின்றோம். எனவே எம்மை நாம் திருத்திகொள்ளவேண்டும்.

இன்று இருக்கின்ற பாரபட்சங்கள், தள்ளிவைப்புகள் எல்லாம் விடுதலைப்புலிகள் காலத்தில் இருக்கவில்லை. இன்று சமாதானம் வந்திருக்கின்றது என்கிறார்கள் சட்டத்தின் ஆட்சி வந்திருப்பதாக கூறுகின்றார்கள். ஆனால் அன்று இருந்த சமத்துவம் காணமால் போய்விட்டது. அப்படியானால் விடுதலைப்புலிகள் மீண்டும் வந்து சமத்துவத்தை நிலைநாட்டவேண்டுமா என்று கேட்க விரும்புகின்றேன்.

எனினும் விடுதலைப்புலிகளின் பெயரைக்கூறி அரசியல் செய்யும் பலர் கூட மலையகமக்கள் மீது பாரபட்சம் காட்டும் செயற்பாடுகள் இன்றும் நடைபெற்றே வருகின்றது. எனவே இன்று உருவாகியுள்ள அமைப்பு பிரதேசவாத்தை தூண்டும் ஒரு அமைப்பாக இருக்ககூடாது மாறாக நாங்களும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற அடையாளத்தை தெரியப்படுத்தவேண்டும். ஒன்றாக இருந்தாலே நாம் விடுதலையை பெறமுடியும்.

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கம் இன்று தலையிட்டிருக்கின்றது. வரவு செலவுத்திட்டத்தின் மூலமாக 50 ரூபாய் வழங்குவதற்கு அது இணங்கி இருக்கிறது. எம்மைப்பொறுத்தவரை அனைத்து அரசாங்கமும் ஒன்றுதான் எல்லாம் திருட்டுக்கும்பல்.

எனினும் இம்முறை நாம் அரசின் கழுத்தைப்பிடித்து அதனை பெற்றிருக்கிறோம். இவ்விடயத்தில் அரசின் தலையீடு என்பது எம்மைப்பொறுத்தவரை பெரிய வெற்றியாகவே இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.