இந்திய இராணுவ வீரர்களாக மாறிய விடுதலைப் புலிகள்

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்திலும் பல்வேறு மட்டத்திலும் இராணுவத்தினருக்கான அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதன்போது தமிழகத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்கள் என நினைத்து விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த மாவீரர்களின் புகைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கூலித் தொழிலாளிகளால் இராணுவ வீரர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு பதிலான விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் புகைப்படங்களை தவறுதலாக அச்சிட்டுள்ளனர்.

எனினும் புகைப்படங்கள் தவறுதலாக அச்சிட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் தொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர். இதனையடுத்து சரியான புகைப்படங்களுடன் பனர்கள் அச்சிட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் விடுமுறைக்காகச் சென்ற இந்திய துணை இராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் 44 பேர் உடல் சிதறி பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.