ஊடகவியலாளர் மீது தாக்குதல் – கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியை கைது செய்ய உத்தரவு

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுகள் வீசி தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு சென்று காணொலிப் பதிவில் ஈடுபட்டிருந்த தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளர் நடராஜா குகராஜனைத் தாக்கிய குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளரைத் தாக்கிய கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அவர் நாளை புதன்கிழமை கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொக்குவில் கருவப்புலம் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுகள் வீசி கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்தது.

அதனையடுத்து சம்பவ இடத்தில் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டிருந்த வேளை யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் டான் தொலைக்காட்சியின் செய்தியாளர் நடராஜா குகராஜன் காணொலி பதிவில் ஈடுபட்டிருந்தார்.

அவரின் பணியைத் தடுக்கும் வகையில் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி செயற்பட்டதுடன், முகத்தில் தாக்கினார் என்று தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். அத்துடன் அவரிடம் பொலிஸ் முறைப்பாடும் பெறப்பட்டது.

சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ தொடர்பில் உடனடி விசாரணைக்கு யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் – 2இற்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

அதனையடுத்து கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.