வெளிநாடு ஒன்றில் உயிரிழந்த மட்டக்களப்பு இளைஞன் – தாயகத்தில் தவிக்கும் குடும்பத்தினர்

சவுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2016ம் ஆண்டின் இறுதியில் சவுதி அரேபியாவுக் சென்ற கந்தசாமி நேசராசா விபத்து ஒன்றில் கடந்த மாதம் உயிரிழந்தார்.

மட்டக்களப்பு – செங்கலடி – மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதான கந்தசாமி நேசராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

ஜித்தாவிலுள்ள நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ரியாத்தில் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்ததாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கந்தசாமி நேசராசாவின் 15 வயது மூத்த மகன் குடும்ப வறுமை காரணமாக ஆடு மேய்த்து வருவதோடு, 3 வயது இளைய மகன் விசேட தேவையுடையவராகக் காணப்படுகின்றார்.

13 வயது மகன் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் 9 ஆம் தரத்திலும் 12 வயது மகன் மாவடிவேம்பு சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் 7 ஆம் தரத்திலும் கல்வி கற்கின்றனர்.

நான்கு மகன்கள், மனைவி, தாய் மற்றும் மனைவியின் பாட்டி ஆகியோரை இதுவரை காலமும் கந்தசாமி நேசராசாவே பராமரித்து வந்துள்ளார்.

நேசராசாவின் திடீர் இறப்பால் தற்போது நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த குடும்பத்தினர், அவரின் உடலை விரைவில் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சவுதி அரசாங்கத்தின் அரச நடவடிக்கைகள் நிறைவடையாத காரணத்தினால் உடலை இலங்கைக்கு கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.