திடீர் பரபரப்பில் பாகிஸ்தான் அரசியல்!! நாளை பதவியை இழப்பாரா பிரதமர் இம்ரான்கான்??

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, வேட்புமனுவில் தவறான தகவலை அளித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பிரதமர் இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி முன்வைக்கப்பட்ட மனு நாளை அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த அனாலூய்சா ஒயிட் என்பவரது மகள் டிரியன் ஒயிட், இம்ரான் கானுக்குப் பிறந்தவர் என்று பரவலாக நம்பப்படுகிறது.

எனினும், பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட இம்ரான் கான், தனது வேட்புமனுவில் டிரியன் ஒயிட் குறித்து எதுவும் குறிப்பிடவில்லையெனக் கூறப்படுகின்றது.

தனக்கு பிரிட்டனில் ஒரு மகள் இருப்பதை வேட்புமனுவில் மறைத்ததன் மூலம், பிரதமர் இம்ரான் கான் அரசியல் சாசனத்தை மீறிவிட்டதாகக் கூறி லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேட்புமனுவில் உண்மையை மறைத்துள்ளதன் மூலம், நாட்டின் பிரதமர் நேர்மையானவராக, இருக்க வேண்டும் என்ற அரசியல் சாசனத்தின் 62 மற்றும் 63-ஆவது பிரிவுகளை மீறியுள்ளதால், அவரைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை, லாகூர் நீதிமன்றம் நாளை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.