ஆண் பிள்ளைகள் தறுதலைகளாகி தரங்கெட்டு நிற்கின்றனர்: கரு.பழனியப்பன் காட்டம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திரைப்பட இயக்குனர், சமூக ஆர்வலர் கரு.பழனியப்பன், பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி,கட்டுப்பாடு விதித்து திரும்பி பார்த்தால் ஆண் பிள்ளைகள் தறுதலைகளாகி தரங்கெட்டு நிற்கின்றனர் எனவும், பெண்களை சக மனுஷிகளென சொல்லிக்கொடுத்து ஆண் பிள்ளைகளை நாம் வளர்த்திடாத வரை பெண்ணுக்கு இங்கு விடிவு இல்லையென தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி வேகமாக பரவி சமூகத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்த காணொளியில் ஒரு பெண்ணிடம் முகநூல் வழியாக நட்பாக பழகிய பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு என்ற நபர் அவரை தனது நண்பர்களுக்கு அறிமுகம் செய்துவைப்பதாக கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்வதும், அதனை அவனது நண்பர்கள் மூலம் வீடியோவாக எடுக்க செல்வதும், நண்பன் என பழகியவனின் துரோகத்தால் அந்த பெண் குரலெடுத்து அழுவது போன்ற நெஞ்சை உறைய செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அதனையடுத்து மேற்காண் சம்பவத்துடன் தொடர்புடைய திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய நான்கு நபர்களை கைது செய்துள்ளது காவல்துறை. இவர்களிடம், பள்ளி, கல்லூரி பெண்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நெஞ்சை உலுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய கடைசி நபர் வரை துளியும் கருணையின்றி தண்டிக்கப்பட வேண்டுமென்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென்பதுவே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.