நேர்த்திக்கடன் செய்வோருக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம்!

நேர்த்தி கடனை நிறைவேற்றும் முகமாக காவடிகள் எடுப்போர் மற்றும் காவடி முள்ளு குத்துவோர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என யாழ்.சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் திணைக்களம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ‘ஆலயத்திற்கு நேர்த்தி வைத்து காவடி எடுப்போரின் நலன் கருதி காவடி முள்ளு குத்துவோர் மற்றும் காவடி எடுப்போர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

சுகாதார முறைகளைப் பேணாத முட்களால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதனால் கட்டாயம் அவர்கள் அனுமதி பெறவேண்டும். அனுமதி பெறாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வரலாற்று சிறப்பு மிக்க மட்டுவில் அம்மன் ஆலய பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவங்கள் நடைபெறவுள்ளன. அதனையொட்டி ஆலயச் சூழலில் தண்ணீர் பந்தல்கள் நடத்துவோர் தண்ணீர் எடுக்கும் கிணறுகள் குறித்தும் சுகாதார திணைக்களத்திற்கு அறிவித்து சுகாதார பரிசோதகரின் அனுமதி பெற்றே நீரினைப் பயன்படுத்த வேண்டும்.

தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக ஆலயத்திற்கு சிறுவர்கள் குழந்தைகளை அழைத்து வருவோர் தாமே சுத்தமான குடிநீரைக் கொண்டு வருவது உகந்தது.

மக்களின் சுகாதார நலன் கருதியே இவ்வாறன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். எனவே அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.