மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல் – கமலுக்கு பெரும் நெருக்கடி

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவதால் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் கட்சியில் இருந்து விலகுவதாக கமலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் முன்னே நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகுவது கட்சிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது.

இக்கட்சியின் வேட்பாளர் அறிமுக விழா வரும் 24ஆம் திகதி கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் கடலூர் மற்றும் நாகைக்கு பொறுப்பாளராக இருந்த சி.கே.குமரவேல், நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கடலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்தவர் என தகவல் வெளியாகியது.

இப்போது குமரவேல் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவருடைய இராஜினாமா ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் கட்டுப்பாடுகளை மீறும் செயல்களை எவ்விதத்திலும் அனுமதிப்பதில்லை. வேட்பாளர்கள் நேர்காணல் முடியும் முன்னே தன்னை வேட்பாளராக அறிவித்தது கட்சிக்கு முரண்பாடான செயல் என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கட்சியில் இருந்து விலகிய குமரவேல், செய்தியாளர்களிடம் கூறுகையில், “கமல் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சி முரணாக உள்ளது. கட்சியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் இராஜினாமா செய்தேன்” என்றார்.

இந்த நிலையிலேயே கடலூர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.