இலங்கை அரசு வன்முறையை கையிலெடுத்தது – தமிழர் ஆயுதத்தை எடுத்தனர்! ஐ.நாவில் கஜேந்திரகுமார்

இலங்கை அரசானது வன்முறையை கையிலெடுத்த போது அதற்கான எதிர்வினையாக தமிழர் தரப்பும் ஆயுதத்தை கையில் எடுக்க நேர்ந்தது என ஐ.நா மனித உரிமை பேரவையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம் பெற்ற பொது விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஒரு மக்கள் குழுமமானது, ஐ.நா பட்டயத்தின் பிரகாரம், எதற்காகவும் பாராதீனப்படுத்தப்பட முடியாத தம் சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பதற்காக எந்தவொரு சட்டபூர்வ நடவடிக்கையையும் எடுப்பதற்கு அந்த மக்கள் கூட்டத்தினர் உரித்துடையவர்கள் என்பதை வியன்னா பிரகடனம் மற்றும் வியன்னா நிகழ்ச்சி திட்டம் என்பன அங்கீகரிக்கின்றன.

இலங்கை அரசின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர் கொண்டு நிற்கும் தமிழ்த் தேசமானது ஒருபோதும் பாராதீனப்படுத்தபட முடியாத தம் சுயநிர்ணய உரிமையை அடைவதற்காக இலங்கையில் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கிறது.

ஆனால், தமிழ் விடுதலை அமைப்பினை மட்டுமின்றி, தனது பார்வையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள் என கருதப்படும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் என அனைவரையும் இலங்கை அரசானது தனது இலக்காக கருதியது.

இப்படியானவர்களுள் ஊடக அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகதொழிலாளர்கள் ஆகியோரே பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

போர் நடந்த காலப்பகுதியில் இலங்கையில் கொல்லப்பட்ட 48 ஊடகவியலாளர்களுள் 41 பேர் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஆவார்கள்.

தமிழர்கள் அல்லாத ஏனைய அந்த 7 ஊடகவியலாளர்களில் ஆகக்குறைந்தது இரு ஊடகவியலாளார்கள், தமிழர்கள் மீதான அரச ஒடுக்குமுறையை வெளிப்படுத்தியமைக்காக அரசினால் கொல்லப்பட்டவர்கள் ஆவர்.

தமிழ்த்தந்தி எனப்படும் ஊடகநிறுவனம் இலங்கை அரசின் ஆகப்பிந்திய இலக்காக அமைந்துள்ளது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய மாவீரர் ஒருவர் பற்றிய கட்டுரை ஒன்றை பிரசுரித்தமைக்காக அவர்கள் பயங்கரவாதத்தடுப்பு பிரிவினால் அச்சுறுத்தப்படதோடு சட்ட நடவடிக்கைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என இந்த சபைக்கு இலங்கை அரசு உறுதியளித்துள்ளநிலையிலும் கூட பயங்கரவாத தடுப்புப்பிரிவின் இந்த நடவடிக்கை இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சுயநிர்ணய உரிமையை வெறுமனே ஒரு குறியீட்டுப்பொருளாக மட்டும் ஐக்கிய நாடுகளும் இந்த அவையும் தொடர்ந்தும் அணுகுமேயானால், சுயநிர்ணய உரிமைக்காக உண்மையில் போராடிக்கொன்டிருக்கின்ற அனைவரும் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.