அவர் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன்! ஸ்டீவ் ஸ்மித் வியந்து கூறியது யாரை தெரியுமா?

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான ஜோஸ் பட்லர், உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் என அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித், ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் தடையில் இருந்த அவர், இந்த தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இங்கிலாந்தின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஜோஸ் பட்லரும் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் பட்லருடன் இணைந்து விளையாடுவது சிறப்பானதாக இருக்கும் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘ஜோஸ் பட்லர் உடன் இணைந்து விளையாடுவது சிறப்பானது. அவருடன் எதிர்முனையில் பேட்டிங் செய்தால் எனக்கு மிகவும் எளிதாக இருக்கும். அவர் ஒரு அற்புதமான வீரர்.

அத்துடன் உலகின் அபாயகரமான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர். ராஜஸ்தான் அணிக்காக சவாய் மான்சிங் மைதானத்தில் விளையாடுவது சிறப்பானதாக இருக்கும். ரசிகர்கள் அதிக அளவு மைதானத்திற்கு திரண்டு வந்து எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும்’ என தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், ஜோஸ் பட்லர் 77 பந்துகளில் 12 சிக்சர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 150 ஓட்டங்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.