பள்ளிவாசலிலிருந்து தப்பிய பெண் வீதியில் சிக்கியது எப்படி? நெஞ்சைப் பிழியும் காரணம்!

நியூசிலாந்தில் பயங்கரவாதி ஒருவரால் கொல்லப்பட்ட ஐம்பது மக்களில் தனது முட்டாள்தனமான செயலால் உயிரை இழந்த இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த அன்சி அலிபாவா எனும் 25 வயதான அந்த பெண் தனது கணவருடன் Christchurch பள்ளிவாசலில் இருந்துள்ளார். திருமணமாகி இரண்டரை வருடங்களைக் கடந்த நிலையில் கடந்த ஒன்பது மாதங்களாக இருவரும் நியூசிலாந்தில் படிப்பிற்கென வந்து தங்கியிருந்துள்ளனர்.

அன்றைய தினமும் பள்ளிவாசல் தொழுகைக்கு இருவரும் சென்றிருந்த நிலையில் கணவரான அப்துல் நசீர் பொன்னத் ஹம்சா பள்ளிவாசலின் வேறொரு அறையில் அவசர வெளியேறுகைக்கு அருகில் தங்கியிருந்துள்ளார். அதேபோல் பெண்களையும் சிறுவர்களையும்கொண்ட வேறொரு குழுவுடன் அன்சி அலிபாவா தங்கியிருந்துள்ளார்.

பள்ளிவாசலில் அந்த துப்பாக்கிதாரி புகுந்து சரமாரியாக சுட்டுக்கொண்டிருந்தபோது அறைகளில் இருந்தவர்கள் ஆளுக்கொரு திக்காக சிதறியோடியுள்ளனர்.

அவ்வாறு ஓடியவர்களுள் அன்சியும் அவரது கணவரும் வேறு வேறு திசைகளில் தப்பியுள்ளனர்.

இதன் பின்னர் தான் அந்த சோகம் நடந்தது,

பள்ளிவாசலினுள் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுக்கொண்டிருந்தபோதே தனது கணவர் உள்ளே சிக்கிவிட்டாரா என்பதை அறிவதற்காக அன்சி மீண்டும் பள்ளிவாசலின் முன்பக்கம் வந்துள்ளார். ஆனால் பள்ளிவாசலுக்குள் அனைவரையும் சுட்டு வீழ்த்திவிட்டு வெளியே வந்த துப்பாக்கிதாரி வீதியில் அன்சியைக் கண்டதும் அவரை நோக்கி சுட்டான்.

சூடுபட்ட நிலையில் அன்சி வீதியின் ஓரமாக விழுந்து ‘ஹெல்ப் மீ, ஹெல்ப் மீ’ என்று கத்துகிறார். வெளியே ஓடிவந்த தாக்குதலாளி அன்சியின் தலையில் மீண்டும் இரண்டு தடவை துப்பாகியால் சுட்டு கொல்கிறான்.

வெளியே தப்பிய அன்சியின் கணவரான ஹம்சா உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்ததுடன் தனது மனைவியைத் தேடுவதற்கு உதவி கேட்டுள்ளார்.

பின்னர் தனது மனைவியைத் தேடியுள்ளார். இதன்போது வீதியோரம் தனது மனைவி இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அங்கிருந்தவர்கள், “யார் அந்தப் பெண்?” என வினவியபோது “எனது மனைவி” என்று ஹம்சா கூறுகிறார். உடனே அங்கிருந்த மற்றொருவர், “இந்த பெண் இறந்துவிட்டார்” என சொன்னபோது ஹம்சாவின் இதயம் வெடித்துவிடுமாப்போல் இருந்தது. அவ்வளவு பேரதிர்ச்சி.

வீதியில் இருந்து காயப்பட்ட ஒரு பெண் உதவி உதவி என்று கத்தியபோது அவளைச் சுட்டுக்கொல்வதானது எந்தவொரு மனிதனுமே செய்யமுடியாத ஒரு கொடுமை என நியூசிலாந்து ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் அன்சி தனது கணவன்மேல் உள்ள அக்கறையில் மிகவும் முட்டாள்தனமான முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.