இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரிகளை ஜெனீவா அமர்விலிருந்து வெளியேற்றிய ஐ.நா அதிகாரிகள்

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் நேற்றைய தினம் பிரித்தானியா கொண்டு வந்த பிரேரணைக்கு எதிராக பக்க அறை அமர்வு நடத்த திட்டமிட்டிருந்த இலங்கை முன்னாள் இராணுவ அதிகாரிகளின் நிகழ்வு திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் செயலாளரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொள்ள இருந்த பல முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் பலர் மீது இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் மனித குலத்திற்கு எதிராக செயற்பட்டவர்கள் என்ற அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இவ் உப குழு கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்த ஒருவர் போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் சுவிட்ஸர்லாந்து நாட்டு நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு உட்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த முறைப்பாட்டை அடுத்து ஐ.நா மனித உரிமைகள் சபையின் பாதுகாப்பு அதிகாரிகள் மிக அவதானமாக செயற்பட்டு முறைபாட்டுக்கு உரியவர்களின் ஆள் அடையாளத்திற்கு உட்படுத்தி சபையின் நுழைவாயிலில் வைத்தே வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.