லண்டனில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் ஏற்பட்ட விபரீதம்!

லண்டனில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL504 என்ற விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி வரும் போது பயணி ஒருவருக்கு அவசர வைத்திய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் ரொமானியா நாட்டின் Bucharest பகுதியில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளினதும் பாதுகாப்பை உறுதி செய்வது ஸ்ரீலங்கன் விமான சேவையின் கொள்கையாகும்.

அதற்கமைய அவசர வைத்திய தேவைக்கமைய விமானம் அருகில் இருந்த Bucharest பகுதி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க விமானி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அதற்கமைய விமானம் தரையிறக்கப்பட்டதன் பின்னர் விமான நிலையத்தின் வைத்தியர் உடனடியாக அழைக்கப்பட்டார்.

சிறுநீரக பிரச்சினையில் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நோயாளிக்கு உடனடியாக மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

அந்த பயணியின் உடல் நிலை தற்போது ஆரோக்கியமாக உள்ளதென ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

சர்வதேச விமான சட்டத்திட்டங்களுக்கமைய நீண்ட தூரம் பயணிக்கும் விமானத்திற்கு கால நேரம் ஒன்று வழங்கப்படும்.

அதற்கமைய ஒரு நாளில் அதிக நேரம் பயணிக்க முடியாது. விசேடமாக எரிபொருள் நிரப்புவதற்கும், விமானத்தின் தரத்தினை சோதனையிடுவதற்கும் சில மணித்தியாலங்கள் அவசியமாகும்.

எனவே இந்த விமானத்தில் பயணித்த 195 பயணிகளுக்கும் குறித்த பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் மீண்டும் பயணத்தை ஆரம்பித்த விமானம் இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.