பிரித்தானியாவில் கணவனின் கொடுமைக்கு பதில் கொடுத்த இலங்கை மனைவி

பிரித்தானியாவில் கணவனை அடித்து கொலை செய்த இலங்கை பெண்ணுக்கு 2 வருடங்களும் 4 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கையை சேர்ந்த 76 வயதான கனகசபை ராமநாதன் என்பவரை 73 வயதான பாக்கியம் ராமநாதன் கொலை செய்துள்ளார்.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றது. இது தொடர்பான வழக்கு விசாரணை பிரித்தானிய நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது கொலையாளிக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

சொத்துப் பிரச்சினை காரணமாக கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

எனினும் திருமணம் செய்த நாள் முதல் கணவன், மனைவியை அடிமையாக நடத்தியுள்ளமையால் மன விரக்தி அடைந்த மனைவி, படுகையில் இருந்த கணவனை அடித்து கொலை செய்துள்ளார்.

கணவனின் கொடுமைகளை இதற்கு மேலும் பொறுக்க முடியாமையினாலும், கணவன் மீது ஏற்பட்டகோபத்தினாலும் குறித்த கொலையை செய்ததாக பாக்கியம் ஒப்புக் கொண்டுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு நீதிமன்றம் 2 வருடங்களும் 4 மாதங்களும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.