தமிழ் குடும்பமொன்றில் 3 பேருக்கு நேர்ந்த பரிதாபம்; ஒரு மாவட்டத்தையே உலுக்கிய சோகம்!

தண்ணீரில் மூழ்கி சகோதரர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம், விருதுநகர் அருகே உள்ள நீர்த்தேக்க அணையில் மூழ்கியே இவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் மேலும்,

விருதுநகர் பழைய அருப்புக்கோட்டை சாலையில் உள்ள செந்திவிநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். பருப்பு மில் தொழிலாளி.

இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது மகன்கள் ஹரிகரன் (வயது 14), ஆதிசே‌ஷன் (10) இருவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வந்தனர்.

விருதுநகரில் தற்போது பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக கலைச்செல்வியின் தம்பி சோலைமுருகன் (40) மதுரையில் இருந்து வந்திருந்தார்.

அவர் இன்று காலை மருமகன்கள் 2 பேரையும் அழைத்துக்கொண்டு விருதுநகர் குல்லூர்சந்தை அணைக்கு சென்றார். அங்கு சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அதனை பார்த்ததும் சோலைமுருகன் உள்பட 3 பேரும் குளிக்க ஆசைப்பட்டனர்.

அதன்படி சோலை முருகன், ஹரிகரன், ஆதிசே‌ஷன் அகியோர் தண்ணீரில் இறங்கி குளித்தனர். அப்போது ஆழமான இடத்திற்கு சென்றதால் 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.

அவர்களை அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் சோலை முருகன் உள்பட 3 பேரும் நீரில் மூச்சு திணறி இறந்தனர். அவர்களது உடலையே மீட்க முடிந்தது. பலியான சோலைமுருகன், மதுரையில் பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். சூழக்கரை போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.