முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் கைது- கடற்படை அதிகாரியின் கடமையைத் தடுத்தாராம்

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன், கடற்படை அதிகாரி கடமை செய்வதைத் தடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

முல்லைத்தீவு கோத்தாபய கடற்படை முகாம் அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 7ஆம் திகதியன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

இதன்போது செல்வபுரம் பேருந்து தரிப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும் ஊடகவியலாளர்களையும் இனம்தெரியா நபர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்ததோடு தனது அலைபேசியில் ஒளிப்படம் எடுத்தார். அவரை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடையாளப்படுத்த முற்பட்டவேளை ஊடகவியலாளாரான சண்முகம் தவசீலன் ய தலையிட்டு அந்த நபர் யார் என்று வினவினார்.

அதற்கு அவர் யார் என சொல்ல மறுத்து அந்த இடத்தினை விட்டு தப்மிக்க முற்பட்டபோது ஆர்ப்பாட்டகாரர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் விசாரித்த போது தான் கடற்படை அதிகாரி என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருமாறு அழைககப்பட்டனர். அவர்கள் அங்கு வர தாமதமான நிலையில் அந்த நபரை வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோத்தாபய கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அவர் கடற்படையினை சேர்ந்தவரா என அடையாளப்படுத்தப்பட்டார்.

கடற்படையினர் அவர் தங்களுடைய நபர் என தெரிவித்த போது, அவரை அந்த இடத்தில் வருகைதந்த பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டார்.

இந்த நிலையிலேயே அந்தக் கடற்படை அதிகாரி ஊடகவியலாளர்களை பழிவாங்கும் நோக்கில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் உண்மைக்கு புறம்பாக முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்றுமுன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளரான ச.தவசீலனை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

அதற்கு அமைய ஊடகவியலாளர் தவசீலன் இன்று காலை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு சென்றிருந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அவரை கைதுசெய்துள்ளனர் .

ஊடகவியலாளரை முல்லைத்தீவு நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.