நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளையும் நாளை மறுதினமும் பூட்டு

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை காரணமாக நாளையும், நாளை மறுதினமும் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் காரணமாக கல்வி அமைச்சு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு – கொச்சிக்கடை மற்றும் கட்டான – கட்டுவப்பிட்டி முதலான பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களில், தேசிய மருத்துவமனைத் தகவல்களுக்கமைய 40 பேர் பலியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், 290 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், காயமடைந்த பலர் மருத்துவமனையில் தற்போதும் அனுமதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 300 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவமனை பணிப்பாளர் கலாரஞ்சனி கணேசலிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு – சங்ரிலா, சினமன் கிரான்ட் மற்றும் கிங்ஸ்பெரி விருந்தகங்களின் வளாகங்களிலும் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.