மட்டக்களப்பில் உயிரிழந்தவர்களில் 14 பேர் மாணவர்கள்

“அவரை பார்த்தபோது எந்த வித்தியாசமும் தெரியவில்லை. சிரித்தபடி, சந்தோசமாக நின்றார். எனினும், அவரது நடவடிக்கையில் எமக்கு சந்தேகமாக இருந்தது“

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் மனித வெடிகுண்டாக வெடித்த பயங்கரவாதியை நேரில் கண்டு, அவரில் முதன்முதலாக சந்தேகமடைந்த தேவாலய ஊழியர் ஒருவர் சொன்ன வார்த்தைகள் இவை.

மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். 100 பேர் வரையில் காயமடைந்தனர். இதில் துயரமாக விடயம்- உயிரிழந்தவர்களில் 14 பேர் மாணவ பிஞ்சுகள்.

தேவாலயங்களில் நடைபெறும் ஞாயிறு வகுப்பின் பின்னர் விளையாடிக் கொண்டிருந்தவர்களே உயிரிழந்தனர்.

இன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கள் பெரும்பாலானவை மனித வெடிகுண்டு தாக்குதல்கள். மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் ஒரு தற்கொலைதாரி குண்டை வெடிக்க வைத்தார்.

அவர் குண்டை வெடிக்க வைப்பதற்கு முன்னரே அவரில் சந்தேகம் ஏற்பட்டு, அவரை வாசலிலேயே நிறுத்தியதால்தான் உயிரிழப்பு குறைவாக ஏற்பட்டுள்ளது. தற்கொலை குண்டுதாரியில் முதன்முதலாக சந்தேகமடைந்த தேவாலய பணியாளர் ஒருவர், தமிழ்பக்கத்திடம் நடந்த சம்பவத்தை விபரித்தார்.

“காலை 8.40 அளவில் இருக்கும். தேவாலயத்தின் வாசல்பக்கமாக ஒருவர் நின்று கொண்டிருந்தது எனது கவனத்தை ஈர்த்தது. அவர் நீண்டநேரமாக நிற்கிறார். அவரிடம் சென்று, உள்ளே வாருங்கள் என அழைத்தேன். அவர் நாசூக்காக மறுத்தார். அவர் புதியவர். வழக்கமாக தேவாலயத்திற்கு வருபவர் அல்ல. என்றாலும், தேவாலயத்திற்கு வருபவர்கள் வெளியில் நிற்காமல், உள்ளே கூட்டிச்சென்று அமர வைப்போம். இன்றும் அதற்குத்தான் முயன்றோம்“ என்றார்.

எனினும், அந்த பணியாளரின் அழைப்பை, அந்த புதியவர் ஏற்கவில்லை.

“எனக்கு சில தொலைபேசி அழைப்புக்கள் வரும். நான் அவற்றை பேசிவிட்டு, புறப்பட்டு விடுவேன். அதற்கு முன்னர் ஆராதனை நடந்தால் கலந்து கொள்ளலாம். எத்தனை மணிக்கு ஆராதனையை தொடங்குவீர்கள்? என்றார்.

9 மணிக்கு ஆராதனை தொடங்குமென்று கூறி, மீண்டும் உள்ளே வருமாறு அழைத்தேன். அவர் மறுத்தார்“ என குறிப்பிட்ட அந்த பணியாளர், அவரது மறுப்பு தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டார்.

“35 வயதிற்குட்பட்ட நபர். செந்தழிப்பான தோற்றமுடையவர். சிரித்த முகத்துடனேயே இருந்தார். ஓரளவு உடம்பானவர். திடகாத்திரமானவர். அவரது நடத்தையில் சந்தேகம் இருந்தது. ஆனால் இப்படியொரு காரியம் செய்வார் என நான் நினைக்கவில்லை.

பெயரை கேட்டேன். ஓட்டமாவடியில் இருந்து வருவதாகவும், பெயர் உமர் என்றும் சொன்னார். “

அந்த புதிய நபர், வந்து நின்ற இடம்- தேவாலய வழிபாட்டு மண்டபத்தின் நடுப்பகுதிக்குள் நுழைய வசதியான வாசல்ப்பக்கம். அந்த வாசலால் நுழைந்தால், தேவாலயத்தின் நடுவிற்கு செல்லலாம். வழிபாட்டிற்கு வருபவர்கள் குழுமிய பின்னர், தேவாலயத்தின் நடுப்பகுதியில் குண்டை வெடிக்க வைக்கப்பதுதான் அவரது திட்டமாக இருந்திருக்க வேண்டும்.

“அவர் ஒரு ரவலிங் பையொன்றை பக்கவாட்டாக கொழுவியிருந்தார். இன்னொரு சிறிய பையொன்றை முன்பக்கமாக கொழுவியிருந்தார்“ என அந்த பணியாளர் குறிப்பிட்டார்.

தான் அழைத்தும், அந்த நபர் உள்ளே நுழையாததையடுத்து, ஆலயத்தின் இளம் மத போதகர்கள் சிலர் வந்து அவரை விசாரித்ததாக தெரிவித்தார். இந்த சமயத்தில் குறிப்பிட்ட பணியாளர் அந்த இடத்தை விட்டு தேவாலயத்தின் உள்பக்கமாக சென்றார்.

அதன்பின் நடந்தவற்றை அவரால் தெளிவாக காணவில்லை. ஆனால், அந்த துறவிகளும், புதிய மனிதரும் தள்ளுமுள்ளு பட்டிருக்கலாமென்றும், துறவிகளை சமாளித்து தேவாலயத்திற்குள் நுழைய முடியாது என்பதை தெரிந்த பின்னரே, அந்த இடத்தில் குண்டை வெடிக்க வைத்திருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார். சுமார் 8.45 அளவில் குண்டு வெடித்திருக்க வேண்டும் என்றார்.

அவர் குண்டை வெடிக்க வைத்த இடம், தேவாலயத்தின் பக்கவாட்டு வாயிலிற்கு வெளிப்புறம். அதற்கு அருகில், ஞாயிறு சமய வகுப்புக்கள் முடிந்த மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். குண்டுவெடிப்பில் அவர்களே அதிகம் சிக்கினர்.

குறிப்பிட்ட நபரில் சந்தேகம் ஏற்படாமல் இருந்திருந்தால், அவர் 9 மணிக்கு ஆராதனை தொடங்கியதும், மண்டபத்தின் நடுப்பகுக்குள் நுழைந்து குண்டை வெடிக்க வைத்திருப்பார். அது மிகப்பெரிய அனர்த்தத்தை ஏற்படுத்தியிருக்கும்.

மட்டக்களப்பு தேவாலய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் 27 பேர். அதில் 26 பேர் அடையாளம் காணப்பட்டு விட்டனர். அடையாளம் காணப்படாத ஒரு சோடி கால்கள் மட்டுமே இப்போது மிச்சமாக உள்ளன. அது அந்த தற்கொலை குண்டுதாரியுடையதாக இருக்கலாமென நம்பப்படுகிறது.