குண்டு வெடிப்பில் சிக்கிய தமது உறவுகள் தொடர்பில் அறிந்து கொள்ள அவசர சேவை இலக்கங்கள்!

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 வரையில் அதிகரித்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும், காவற்துறை அதியகட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் காயமடைந்தவர்கள் 500 பேர் வரையில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் தற்போது வரை 176 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், மருத்துவமனைகளில் இருந்து கிடைக்கும் தகவல்களுக்கு அமைய உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், 51 பேரின் சடலங்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

றாகமை மருத்துமனையில் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 6 பேரின் சடலங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 62 பேர் தொடர்ந்தும் நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 28 என தெரியவந்துள்ளது. இதேவேளை, கொழும்பில் இடம்பெற்ற தாக்குதல்களில் 36 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் வெளிவிவகாரதுறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, நீர்கொழும்பு மருத்துவமனையில் 18 சடலங்களின் மரண விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மட்டக்களப்பு மருத்துவமனையில் இதுவரையில் 69 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்ப்படுகின்றது.

மக்கள் அவசர தகவல்களை அறிந்துக் கொள்வதற்காக 24 மணிநேர சேவையை கொண்ட 011 302 48 73, 011 302 48 83 மற்றும் 011 201 30 39 என்கிற இலக்கங்களுக்கு தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உயிரிழந்த வெளிநாட்டவர்கள் குறித்த தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக 0112 32 30 15 என்கிற இலக்கங்களுக்கு தொடர்பை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.