மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருளால் பரபரப்பு!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் வளன் நகர் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் பண்ணை வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கிளைமோர் குண்டு ஒன்றை மன்னார் பொலிஸார் இன்று (22) திங்கட்கிழமை காலை அடையாளப்படுத்தியுள்ளனர்.

பண்ணையின் உரிமையாளர் குறித்த பண்ணையை துப்பரவு செய்து கொண்டிருந்த போது முருங்கை மரத்தின் கீழ் வெடி பொருள் புதைத்து வைக்கப்பட்டுள்ளமையை அவதானித்த நிலையில்,உடனடியாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதன்போது மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,மன்னார் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதோடு குறித்த வெடி பொருளையும் பார்வையிட்டனர்.

இதன் போது கிளைமோர் குண்டு ஒன்றே பொதி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தமை தெரிய வருகின்றது.

குறித்த விடையம் தொடர்பாக மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு,கண்டு பிடிக்கப்பட்ட கிளைமோர் குண்டை மீட்டு செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புச்சம்பவம் இடம் பெற்று வருகின்ற நிலையில்,ஓலைத்தொடுவாய் வளன் நகர் பகுதியில் குண்டு மீட்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.