கொழும்பில் 1000 ரூபா தாளை இழுத்தால் வெடிக்கும் விதமாக வெடிகுண்டு

கொச்சிக்கடை – ஜிந்துப்பிட்டி சந்தியிலுள்ள கொழும்புத் துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்டு, வெடிக்க வைக்கப்பட்டது.

4 சமையல் எரிவாயுச் சிலிண்டர்களை இணைத்துப் பொருத்தப்பட்டிருந்த இந்தக் குண்டு, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயழிலக்கும் பிரிவால் செயலிழக்கப்பட்டதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.

இந்த வெடிகுண்டில் நூல் ஒன்று கட்டப்பட்டு அதன் மறு நுனியில், ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் ஒன்று கட்டப்பட்டு இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் ருபாவிற்கு ஆசைப்பட்டு யாராவது அதனை எடுக்க முற்படும்போது, ​வெடிகுண்டு வெடிக்கும் வகையிலேயே சூட்சுமமான முறையில் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் எம்.ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் குண்டு ​தகர்க்கச் செய்யப்பட்டதாகவும் இதன்போது, பல வீடுகளின் கூரைகள், யன்னல்கள் சேதமடைந்துள்ளதுடன் கொழும்புத் துறைமுகத்தின் மதிலும் உடைந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.