கொழும்பு – தெமட்டகொடவில் மகாவில கார்டனில் தற்கொலை குண்டுதாரிகள் தங்கியிருந்ததாக கூறப்படும் வீட்டில் இருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தை தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதியுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் தெமட்டகொடவில் உள்ள வீட்டை கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளும் சிறப்பு அதிரடிப்படையினரும் முற்றுகையிட்டனர்.
அப்போது, அங்கிருந்த ஒரு தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்தார். அதில், மூன்று காவல்துறை அதிகாரிகளும், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர்.
அந்த வீட்டில் நடத்தப்பட்ட தேடுதலிலேயே தற்கொலைக் குண்டுதாரி, இறப்பதற்கு முன்னதாக தனது தாயாருக்கு எழுதிய கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கடிதத்தில், தன்னை மன்னித்து விடுமாறு அவர் தாயாரிடம் கேட்டுள்ளார் என்றும், தனது மதத்தின் பெயரால் இந்த தாக்குதலை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.