கொழும்பில் வெடிகுண்டுகளுடன் வெடித்து சிதறிய இளம் பெண்

கொழும்பு தெமட்டகொட வீட்டில் நடந்த தற்கொலை தாக்குதல் தொடர்பில் பொலிஸார் பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

தாக்குதல்தாரி பதுங்கியிருந்த வீட்டினை சோதனையிடச் சென்ற போது வீட்டிலிருந்து பெண்ணொருவர் தனது இரு பிள்ளைகளுடன் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

கீழ் மாடியில் இருந்த நபர் ஒருவர் ரிமோர்ட் ஊடாக மேல் மாடியில் குண்டை வெடிக்கச் செய்து பொலிசாரை கொலை செய்துள்ளார் என சந்தேகிக்கபப்டுகின்றது.

இந்நிலையில் வீட்டு உரிமையாளரின் மகனான 30 வயதுடைய இஜாஸ் அஹமட் இப்ராஹீம், பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது இளைய சகோதரரான இஸ்மாயீல் அஹமட் இப்ராஹீம் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.

குறித்த வீட்டில் இடம்பெற்ற முதல் வெடிப்பின் பின்னர் பொலிஸ் அதிரடிப் படை வீட்டை சோதனையிடச் சென்றிருந்தது. இதன்போது அங்கிருந்த , ஷங்ரில்லா ஹோட்டல் தாக்குதலின் தற்கொலை குண்டுதாரியான இன்ஹாம் என்பவரின் 25 வயதுடைய மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்ததாக தெரியவருகிறது.

இக்குண்டு அவரால் வெடிக்கச் செய்யப்பட்டதா அல்லது அதுவும் ரிமோர்ட் கொன்ட்ரோல் ஊடாக வேறு ஒருவரால் இயக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெமட்டகொட பகுதியில் மூன்று குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன்போது மூன்று பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.