குண்டு வெடிப்பு சம்பவங்கள்: யாழில் கை கலப்பில் ஈடுபட்ட இளைஞர்கள்

நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டு பின்னர் கை கலப்பில் ஈடுபட்ட இரு இளைஞர்களுக்கு, பொலிஸார் கடும் எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியிலுள்ள உணவகமொன்றில் கடமையாற்றும் இரு இனங்களை சேர்ந்த இளைஞர்கள் இருவர், குண்டு வெடிப்பு தொடர்பில் கருத்து முரண்பட்டு வாய் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த வாய் தர்க்கம் ஒரு கட்டத்தில் கைக்கலப்பாக மாறி அடிதடியில் ஈடுபட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கடை உரிமையாளர் சம்பவம் குறித்து, சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இவ்வாறு அழைத்து சென்ற இருவரையும், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் கடுமையாக எச்சரித்து அவர்கள் விடுவித்துள்ளனர்.