கட்டாரிலிருந்து இலங்கைக்குள் புகுந்துள்ள அந்த ஆபத்தான நபர் யார்? விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கைக்குள் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு மீண்டும் பயங்கரவாத தாக்குதலை நடத்தும் ஆபத்து சம்பந்தமாக இந்திய புலனாய்வு சேவை, இலங்கை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை வழங்கியுள்ளது.

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் றில்வான் என்ற ஜால் அல் -குய்டால் உள்ளிட்ட குழுவினர் இந்த தாக்குதலை நடத்த தயாராகி வருவதாக இந்திய புலனாய்வு சேவை தெரியப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை தாக்குதலில் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் ஹசீம் கொல்லப்பட்டார்.

இதனையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பின் அந்த அமைப்பின் தலைவராக பொறுப்பேற்கவும் அமைப்பின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் நோக்கில், சஹரான் ஹசீமின் மைத்துனரான நல்பர் மௌலவி என்ற நபர், கட்டார் நாட்டில் இருந்து இலங்கை வந்துள்ளதாகவும் இந்திய புலனாய்வு சேவை உறுதிப்படுத்தியுள்ளது.

இதனிடையே இந்தியாவில் இயங்கும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர்கள் மற்றும் அதன் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பாக இந்திய புலனாய்வு பிரிவினர் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் மீது இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு பயங்கரவாத தாக்குதலை நடத்தக் கூடும் என இந்திய புலனாய்வு சேவை கடந்த 4 ஆம் திகதி இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்திருந்தது. இது குறித்து இலங்கை பாதுகாப்பு தரப்பினர் சரியான கவனத்தை செலுத்தவில்லை என குற்றம் சுமத்தப்படுகிறது.

இலங்கையில் இயங்கும் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கும் இடையில் நேரடியாக தொடர்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்திய புலனாய்வு சேவை மற்றும் பாதுகாப்பு தரப்பு இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு தேவையான சகல புலனாய்வு உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.