மயிரிழையில் தப்பிய கொழும்பின் பிரபல தாஜ் சமுத்திரா ஹோட்டல்! அதிர வைக்கும் தகவல்

கொழும்பு நட்சத்திர விடுதிகளில் தற்கொலை தாக்குதல் நடத்திய தௌஹீத் ஜமா அத் பயங்கரவாதிகள் பெருமளவு பொதுமக்களை கொன்று குவித்தனர்.

சினமன் கார்டன், கிங்ஸ்பெரி, சங்கரில்லா ஹோட்டல்களில் மனித வெடிகுண்டாக பயங்கரவாதிகள் வெடித்து சிதறினர்.

கொழும்பிலுள்ள இன்னொரு நட்சத்திர ஹோட்டலான தாஜ் சமுத்திரா ஹோட்டலிலும் வெடிகுண்டுடன், தற்கொலைதாரியொருவர் சென்று தாக்குதலிற்கு முயற்சித்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அப்துல் லதீப் ஜமீல் மொஹமட் என்பவரே அந்த தாக்குதலை நடத்த முயற்சித்தார். இவர் பிரித்தானிய பல்கலைகழகம் ஒன்றில் கற்றிருக்கிறார். பிரித்தானியாவின் தென்கிழக்கு பகுதியில் 2006 -2007 காலப்பகுதியில் தங்கியிருந்தார். இலங்கை திரும்புவதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் முதுகலை பட்டத்தை பெற்றிருக்கிறார்.
ஏனைய தாக்குதல்தாரிகளை போலவே, காலை 9 மணியளவில் குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்துடன் இவரும் தாஜ் சமுத்திரா நட்சத்திர ஹோட்டலிற்கு சென்றார்.

ஏனைய அனைத்து தாக்குதல்தாரிகளையும் போல, முதுகுப்பையில் குண்டை பொருத்திக் கொண்டு சென்று, தாஜ் சமுத்திரா ஹோட்டலிற்குள் வெடிக்க வைக்க முயன்றார். எனினும், குண்டு வெடிக்கவில்லை.

இதனால் அச்சமடைந்த மொஹமட் நட்சத்திர ஹோட்டலை விட்டு வெளியேறி, தெஹிவளைக்கு சமீபமாக உள்ள விடுதியொன்றிற்கு வந்தார். அந்த விடுதியில் தங்கியிருந்து விட்டே, தாக்குதலிற்காக தாஜ் சமுத்திரா ஹோட்டலிற்கு சென்றிருந்தார்.

தாஜ் சமுத்திரா ஹோட்டல் பணியாளர்கள் அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்து, அவரை கவனிக்கத் தொடங்கியதாலேயே குண்டுப்பையை அங்கு வைக்காமல் தன்னுடன் எடுத்து செல்ல வேண்டிய நெருக்கடி அவருக்கு ஏற்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.

தெஹிவளை விடுதியில் குண்டை சோதனை செய்தபோது, அது வெடித்து மொஹமட்டும், இன்னொருவரும் உயிரிழந்தனர்.

ஏனைய பிரதேசங்களில் நடந்த ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புக்களிற்கு இரண்டு மணித்தியாலம் கழிந்து, இந்த சம்பவம் நடந்தது.

இதேவேளை, மொஹமட் குண்டுப்பையை விருப்பமின்றி எடுத்து வந்தாரா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.

இதேவேளை, சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான நிபுணர்களின் கருத்துப்படி, பிரித்தானியா- குறிப்பாக தென்கிழக்கு பகுதி பல்கலைகழக மாணவர்களிடையே இஸ்லாமிய தீவிரவாத கருத்துக்கள் வேரூன்றி வருவதாக நீண்டகாலமாக எச்சரித்துள்ளனர். ஐ.எஸ் அமைப்புடன் இணையும் ஐரோப்பிய இளைஞர்களின் பட்டியலில், பிரித்தானிய பல்கலைகழக மாணவர்களே முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.