சந்தேகநபர்களை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரியுள்ள பொலிஸார்

ஈஸ்டர் ஞாயிறு தினமான கடந்த 21ஆம் திகதி கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார், நீர்கொழும்பு புனித செபஸ்தியார் மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயங்கள் உட்பட பல இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றிருந்தன.

அன்றைய தினம் பதுளை புனித மரியாள் தேவாலயம் மற்றும் மார்க் தேவாலயங்களில் குண்டு வெடிப்பு நடத்தப்பட இருந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குண்டு வெடிப்பை மேற்கொள்ள வந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்கள் நடமாடும் காட்சிகள் இந்த தேவாலயங்களில் உள்ள பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளன.

ஒரு நபர் பையொன்றை தோளில் போட்டவாறு வரும் காட்சியும் மற்றைய நபர் அதனை உன்னிப்பாக அவதானிக்கும் காட்சியும் கமராக்களில் பதிவாகியுள்ளது.

ஒரு தேவாலயத்தில் தாக்குதல் இலக்கு தவறியதால், மற்றைய தேவாலயத்திற்கு செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது.

கொழும்பில் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்ததையடுத்து உடனடியாக செயற்பட்ட பதுளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் தேவாலயங்களுக்கு சென்று ஆராதனைக்கு வந்திருந்த மக்களை திருப்பி அனுப்பியதுடன் பங்கு தந்தைகளுக்கும் தெளிவுப்படுத்தியிருந்தனர்.

இதனால், குண்டுதாரிகளின் தாக்குதல் இலக்கு தவறியுள்ளதாக நம்பபடுகிறது. இந்த சந்தேகநபர்களை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதுளை தலைமையக பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, பதுளை புனித மரியாள் தேவாலயத்தில் ஆராதனையில் கலந்து கொண்டதாக நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.