குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அமெரிக்கப் பெண்ணின் படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்

தாம் வெளியிட்ட புகைப்படம் தவறானது என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சிலரை பொலிஸார் அடையாளப்படுத்தி அவர்கள் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர்.

குறிப்பாக தேடப்படும், நபர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர் விபரங்களை பொலிஸார் வெளியிட்டிருந்தனர்.

மொஹமட் இவுஹய்ம் சாதிக் அப்துல்ஹக், பாத்திமா லதீபா, மொஹமட் இவுஹய்ம் ஷாஹிட் அப்துல்ஹக், புலஸ்தினி ராஜேந்திரன் எனப்படும் சாரா, அப்துல் காமர் பாத்திமா காதியா, மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் ஆகிய நபர்களின் பெயர்களையே பொலிஸார் வெளியிட்டனர்.

இவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 0718591771, 0112422176, 0112395605 ஆகிய இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தருமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்தது.

குறித்த சந்தேக நபர்களில் அப்துல் காதர் ஃபாத்திமா காதியா என்பவர் தௌகீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹசீமின் மனைவி என அடையாளப்படுத்தினர்.

இந்நிலையில், தீவிரவாதிகளுடன் தொடர்பு என தேடப்படும் பெண் என்று பொலிஸார் ஊடகங்களுக்கு கொடுத்த படம் தவறு என்று அமெரிக்காவைச் சேர்ந்த அவர் பெயர் Amara Majeed. தன்னுடைய புகைப்படம் தவறாக வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அமார மயீட் என்பவர் இஸ்லாமிய செயற்பாட்டாளர் என்றும், பிபிசி வெளியிட்ட 100 பெண்கள் பட்டியலில் 2015ம் ஆண்டு இடம்பெற்றிருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை தற்போது பொலிஸார் வெளியிட்டுள்ள விளக்கச் செய்தியில், ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், அப்துல்காதர் ஃபாதிமா காதியா என்ற பெண் தேடப்படுவதாகவும், அவரது புகைப்படம் என்று கூறி வெளியிட்டிருந்த படம் பிழையானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.