ஏறாவூர் இரட்டைக் கொலை விவகாரம் : ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய கைதிகள்!

ஏறாவூர் இரட்டைக் கொலை விவகாரம் : ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய கைதிகள்!

ஏறாவூர் இரட்டைக் கொலைச் சந்தேக நபர்களை இன்றைய தினம் ஏறாவூர் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின் வழக்கு முடிவடைந்து சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றிய போது, குறித்த சந்தேக நபர்கள் அங்கிருந்த ஊடகவியலாளர்களை திட்டியதுடன் சந்தேக நபர்கள் அணிந்திருந்த செருப்பைக் காட்டியும் அச்சுறுத்தியுள்ளனர்.

குறித்த வழக்கு தொடர்பாக ஊடகவியலாளர்கள் ஒவ்வொரு வழக்குத் தவணைக்கும் அறிக்கையிட செல்லும் வேளையில் ஏறாவூர் இரட்டைக் கொலை சந்தேக நபர்கள் இவ்வாறு நடந்துக்கொள்வதுடன், தொடர்ந்தும் ஊடகத்துக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பான 6 சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல் எதிர்வரும் ஜுன் மாதம் 9 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமான எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில், ஏறாவூர் சுற்றுலா நீதவான் மன்றில் இன்று (31) இவர்களை ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இவர்களுக்கான விளக்கமறியலை நீடித்துள்ளார்.

ஏறாவூர், முகாந்திரம் வீதிக்கு அருகில் அமைந்துள்ள தங்களின் வீட்டில் வசித்துவந்த தாயான நூர் முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பானுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவரிகளின் சடலங்கள் கடந்த வருடம் செப்டெம்பர் 11 ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.