பூண்டுலோயாவில் 16 வயது யுவதி பரிதாபமாக பலி! (காணொளி)

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் – பூண்டுலோயா பிரதான வீதியில் சீன் கீழ்பிரிவில் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், 16 வயதுடைய யுவதி பலியாகியுள்ளதுடன் இருவர் பலத்த காயமடைந்த நிலையில், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீன் தோட்டத்திலிருந்து பூண்டுலோயா நகரத்தை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும், பூண்டுலோயா நகரத்திலிருந்து சீன் தோட்டத்தை நோக்கி சென்ற மற்றுமொரு முச்சக்கர வண்டியும் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் சீன் தோட்டத்திலிருந்து பூண்டுலோயா நகரத்தை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியில் சாரதியுடன் பயணித்த அக்கா மற்றும் தங்கை ஆகிய இருவரில் தங்கை ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

சாரதியும், மேற்படி உயிரிழந்த தங்கையின் அக்காவும் ஆபத்தான நிலையில் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூண்டுலோயா டன்சினன் தோட்டம் அக்கரமலை பிரிவைச் சேர்ந்த சந்திரமோகன் சாலினி (வயது 16), எனும் யுவதியே விபத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்ததோடு, அவர்களை கம்பளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த யுவதியின் சடலம் கொத்மலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி மதுபோதையில் இருந்ததாகவும், சாரதியை கைது செய்வதாக தெரிவித்த பூண்டுலோயா பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.