சமூகத்தில் திருந்தி நல்ல பிரஜைகளாக மாறிய ஆவா குழு : பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

யாழ்ப்பணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் தற்போது திருந்தி சமூகத்தில் நல்ல பிரஜைகளாக வாழ்ந்து வருவதாகத் வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசாந்த் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசாந்த் பெர்ணான்டோ, தென் மாகாணத்துக்கு இடமாற்றம் பெற்று செல்லவுள்ளார். இந்நிலையில் காங்கேசன்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஊடகவியலர்களை சந்தித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாணம் போருக்கு பின்னர் அமைதியாக இருந்தது. பின்னர் சில இளைஞர்கள் குழுக்களாக இணைந்து வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். அவ்வாறான இளைஞர் குழுக்களுக்கு ஒவ்வொரு பெயர்களும் இருந்தன. இதனால் வடக்கில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பணத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அரங்கேறின.

இந்த குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவர்கள் வன்முறையில் ஈடுபட உதவிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும் அவர்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்க யாரும் வருவதில்லை. அதனால் வெளியில் வந்து விடுகின்றனர். அவ்வாறு வருபவர்கள் தாம் இனிமேல் இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபடமாட்டோம் என உறுதியளித்துள்ளனர். அத்துடன் அவர்கள் திருந்தி வாழ்ந்தும் வருகின்றனர்.

தற்போதும் ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆனால் தொட்டதுக்கு எல்லாம் அவர்களை நாம் கைது செய்ய முடியாத நிலை உள்ளது. ஏனெனில், உரிய ஆதாரம், சாட்சியத்துடன் நாம் கைது செய்ய வேண்டிய தேவைகள் இருக்கின்றன. வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக நாம் குற்றச் செயல்களில் ஈடுபடாதவர்களை கைது செய்ய முடியாது.

எது எவ்வாறாயினும், யாழ்ப்பணத்தில் அரங்கேறிய வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தமை, குற்றங்களை கட்டுப்படுத்தியமை அதற்கும் அப்பால் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது திருந்தி வாழ்கின்றனர். அவ்வாறு வாழ்பவர்களின் பெற்றோர்கள் எமக்கு தொடர்பை ஏற்படுத்தி மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். இந்த மன நிறைவுடன் வடக்கை விட்டு செல்வதாகவும் அவர் மேலும் கூறினார்.