தாதிய உத்தியோகத்தர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் நாளைக் காலை 7 மணியிலிருந்து நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை காலை 7 மணிவரையான 24 மணி நேரம் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சம்பள முரண்பாடு மற்றும் பதவி உயர்வு வழங்கலிலுள்ள முரண்பாடுகளைத் தீர்க்கக் கோரி நிறைவுகாண் மற்றும் துணை மருத்துவ சங்கத்தினருடன் இணைந்து அரச தாதி உத்தியோகத்தர் சங்கமும் நாடு முழுவதும் இன்று காலை 7 மணி தொடக்கம் 24 மணித்தியாலங்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுகின்றது.
எமது தாய்ச் சங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளோம். இதுதொடர்பான அறிவிப்பை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வைத்தியசாலை நிர்வாகத்துக்கு வழங்கிவிட்டோம்.

இந்தப் போராட்டத்தின் போது அவசர மற்றும் நோயாளர்களின் உயிர்காக்கும் நடவடிக்கைகளின் மட்டும் தாதிய உத்தியோகத்தர்கள் பணியாற்றுவார்கள். எமது போராட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு எமது மன வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம் – என்றுள்ளது.