சிறிலங்கா விரைகிறார் அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர்

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனைத் தெரிவித்தார்.

நாளை மறுநாள்,( மார்ச் 09) சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன், எதிர்வரும் 11ஆம் நாள் வரை அங்கு தங்கியிருப்பார் என்றும் அவர் கூறினார்.

இதன்போது, சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் மூத்த அதிகாரிகளையும் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையிலும், அவசரகாலச்சட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், ஐ.நா உதவிச்செயலரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

எனினும், இந்தப் பயணம், அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னரே திட்டமிடப்பட்டது என்றும், சிறிலங்காவுக்கும் ஐ.நாவுக்கும் இடையில் தொடருகின்ற ஒத்துழைப்புகளை அடிப்படையாகக் கொண்டது என்றும்,ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருக்கும் மூன்றாவது பயணம் இதுவாகும்.

இவர் ஏற்கனவே, 2015இலும், 2017 பெப்ரவரியிலும், சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.