கண்டி மாவட்டம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு – பாதுகாப்பு அதிகரிப்பு (படங்கள்)

கண்டி மாவட்டம் முழுவதும், இன்று மாலை 6 மணி தொடக்கம் மீண்டும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெல்தெனிய, திகண பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை அடுத்து ஏற்பட்ட பதற்றநிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கண்டி நகரப் பகுதியெங்கும் சிறிலங்கா இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே கண்டி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் எக்கநாயக்க அறிவித்துள்ளார்.