பாதணி அணிந்துவரவில்லையென்பதற்காக தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில்..!

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தாழங்குடாவில் உள்ள பாடசாலையொன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவன் ஆசிரியரால் தாக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

தாழங்குடா விநாயகர் வித்தியாலயத்தில் தரம் 09இல் கல்வி பயிலும் இன்பராஜா சகீர்தன்(14வயது)என்னும் மாணவனே நேற்று திங்கட்கிழமை ஆசிரியர் ஒருவரினால் தாக்கப்பட்ட நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

நேற்று பாடசாலைக்கு வந்த குறித்த மாணவன் பாதணி அணிந்துவரவில்லையென குறித்த ஆசிரியர் மாணவனை தாக்கியுள்ளதாக மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பாடசாலையின் அதிபர் எஸ்.மதிசூதன் தெரிவித்தார்.