ஐ.நா சாசனத்தின் விசேட தூதுவர் இளவரசர் அல் ஹூசைன் முகமாலைக்கு விஜயம்!!

கிளிநொச்சி முகமாலை மற்றும் கிளாலி ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை, கண்ணிவெடி அகற்றும் ஐ.நா. சாசனத்தின் விசேட தூதுவர் இளவரசர் மிரெட் ராட் அல் ஹூசைன் பார்வையிட்டுள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள அவர், இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் குறித்த நடவடிக்கைகளை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் மற்றும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

அத்தோடு, கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இளவரசர் மிரெட் ராட் அல் ஹூசைன் நேற்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகளை சந்தித்திருந்தார்.

இதேவேளை கிளிநொச்சி விஜயத்தைத் தொடர்ந்து இன்று மாலை கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில், கண்ணிவெடிகளை தடை செய்வதன் முக்கியத்துவம் தொடர்பாக முக்கிய உரையொன்றையும் இளவரசர் மிரெட் ராட் அல் ஹூசைன் நிகழ்த்தவுள்ளார்.