உங்களுக்கு முதலாளி ஆகும் யோகம் இருக்கிறதா? #Astrology

எல்லோருக்குமே ஒருபெரிய நிறுவனத்துக்கு முதலாளியாக இருக்க வேண்டும். நமக்குக் கீழ் பத்து, ஐம்பது ஆட்கள் வேலை பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், எல்லோருக்கும் அப்படி வாய்ப்பதில்லை. முதலாளி ஆகும் யோகம் யாருக்கு இருக்கிறது என்பது பற்றி ஜோதிட நிபுணர் சூரியநாராயணமூர்த்தியிடம் கேட்டோம்.


”உலகில் எல்லா உயிர்களும் தனித்தனியானவைதான் என்றாலும், ஒன்றையொன்று சார்ந்துதான் அவை வாழ்கின்றன. பூமியில் வாழும் உயிர்களில் மனிதனைத் தவிர வேறெந்த விலங்கும் வாழ்வதற்காக பணம் செலவு செய்வதில்லை. ஆனால், மனிதன் வாழ்வதற்கு பணம் இன்றியமையாததாக இருக்கிறது.

பணத்தைப் பெற, அரசுவேலை, தனியார்த்துறை வேலை, வியாபாரம், சொந்தத் தொழில், கூலித்தொழில், என ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்து, வாழ்கிறார்கள். அந்த விதத்தில் யாருக்கு முதலாளியாகும் யோகம் இருக்கிறது என்று பார்ப்போம்.

முதலீடு போட்டு வியாபாரம் செய்பவர் முதலாளி என்கிறோம். ஆனால், முதலீடு, விசுவாசமான தொழிலாளர்கள், நல்ல லாபம் இவை மூன்றும் இணைந்தால்தான் அவர் நிரந்தர முதலாளியாக இருக்க முடியும். இல்லாவிட்டால், தற்காலிக முதலாளியாகத்தான் இருக்க முடியும்.

ஒரு நல்ல முதலாளிக்கு, நன்றாகத் தொழில் தெரிந்த தொழிலாளிகள் கிடைத்தாலும் அந்தத் தொழிலாளர்கள் விசுவாசமுள்ளவர்களாகக் கிடைக்கவேண்டுமென்றால், அதற்கு பாக்கியம் செய்திருக்கவேண்டும்.

* ஜாதகத்தில் ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானம் சிறப்பாக சுப பலன்களுடன் திகழவேண்டும். லக்னாதிபதி ஒன்பதில் நிற்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், ஒன்பதுக்குடையவன் லக்னத்தில் நிற்க வேண்டும்.

* எந்த லக்னமாக இருந்தாலும், யோகாதிபதி கெடாமல் சுபபலத்துடன் இருக்க வேண்டும். ஜாதகருக்கு ஒன்பதுக்குடையவன் பத்திலும், பத்துக்குடையவன் ஒன்பதிலும் பரிவர்த்தனை பெற்றிருந்தால், அவருக்கு விசுவாசமுள்ள நல்ல தொழிலாளர்கள் அமைவார்கள். இத்தகைய அமைப்பைத்தான் தர்மகர்மாதிபதி யோகம் என்பார்கள்.

* முதலாளிக்கு போட்ட முதலீடு நஷ்டமின்றி திரும்பக் கிடைக்க வேண்டுமென்றால், ஜாதகத்தில் குரு கெட்டுப்போகாமல் நல்ல நிலையில் இருக்க வேண்டும். பத்துக்கு உடைய கிரகம், 1,2,4,9,10,11 ஆகிய இடங்களில் இருப்பது நல்ல ஒரு அம்சமாகும்.

*சூரியன் ஆளுமைப் பண்புக்கு உரிய கிரகமாகும். ஜாதகத்தில் சூரியன் எந்த அளவு ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ வலிமை பெற்றிருக்கிறதோ அதைப் பொறுத்தே அவரது ஆளுமைப் பண்பும் முடிவெடுக்கும் திறனும் வெளிப்படும்.

* ஒருவருடைய ஜாதகத்தில் குரு, சூரியன், புதன் ஆகிய மூவரும் வலுவான நிலையில் இருந்தால், ஜாதகர் மிகப்பெரும் தொழிலதிபராகத் திகழ்வார்.

இந்த வகையான ஜாதக அமைப்பு உள்ளவர்கள், ஏதோ தசா புக்தி காரணமாக வேண்டுமானால், சில காலம் மாதச் சம்பள வாழ்க்கைக்குப் போகலாம். ஆனாலும், விரைவிலேயே அந்தத் தொழிலின் நுட்பங்களை அறிந்துகொண்டு முதலாளி ஆகி விடுவார்கள்.