சிரியா இனப்படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்! (Video)

கிழக்கு ஹௌட்டா மீது சிரிய படைகள் நடத்திவரும், கொடூரத் தாக்குதல்கைளக் கண்டித்தும், அதனை நிறுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு எதிரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கில் வாழும், தமிழ், முஸ்லிம் மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இதன்போது, சிரியாவின் கிழக்கு ஹௌட்டாவில் இடம்பெற்று வரும் மனித படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அங்கு உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினார்கள்.

அதேவேளை. 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற அதே அநீதி சிரியாவிலும் இடம்பெறுவதாக அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.