யாழ். போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவில் நுழைவு அனுமதி அட்டை நடைமுறை காரணமாக தூர இடங்களில் இருந்து வருபவர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், தூர இடங்களில் இருந்து வருபவர்கள் நோயாளர்களை பார்வையிட முடியாதிருப்பதுடன், பாதுகாப்பு கடமையில் இருப்பவர்கள் அவர்களை மிகவும் மோசமாக நடத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம், 20ஆம் இலக்க விடுதியில் உள்ள நோயாளரை பார்வையிட தூர இடங்களில் இருந்து உறவினர்கள் வந்திருந்த போதிலும், நுழைவு அனுமதி அட்டை இல்லாமையின் காரணமாக பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இதன்போது பாதுகாப்பு கடமையில் இருந்த பெண் ஒருவர் நோயாளர்களை பார்வையிட வந்தவர்களை மிகவும் மோசமாக நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு கடமையில் இருந்த குறித்த பெண் தூர இடங்களில் இருந்து வந்தவர்களை, நோயாளர்களை பார்வையிட அனுமதி வழங்காததுடன், மிகவும் இழிவான வார்த்தைகளை கொண்டு திட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.