மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு :மற்றொருவர் படுகாயம்!

மட்டக்களப்பு – சந்திவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரையம்பதியிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளை எதிரே வந்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதியதால் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில் ஆரையம்பதியைச் சேர்ந்த எஸ்.சஞ்சேகுமார் (26 வயது) என்பவரே உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எஸ்.சதீஸ்குமார் (21 வயது) படுகாயமடைந்த நிலையில் சந்திவெளி பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள பாதசாரிகள் கடவையில் பாதசாரிகள் கடப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை குறித்த டிப்பர் ரக வாகனம் முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்விபத்து ஏற்பட்டது.

மேலும் இவ்விபத்துடன் தொடர்பான வாகனம் தப்பிச் சென்றுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.