அவதானமாகப் பேசுங்கள்! டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்

அரசியல்வாதிகளும், பொறுப்புவாய்ந்த ஊடகங்களும் மிக அவதானமாக செய்திகளையும், தகவல்களையும் வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தியதலாவ – பண்டாரவளை பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த பேருந்தில் குண்டு வெடித்தது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானாந்தா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பேசிய போது,

குறித்த சம்பவமானது கண்டிக்கத்தக்கதும், வருந்தத்தக்கதுமாகும். இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உண்மைகள் அறியப்பட வேண்டும்.

இதேவேளை, பொறுப்புவாய்ந்த ஊடகங்கள், பொறுப்புமிக்க அரசியல்வாதிகள் இந்த விடயம் தொடர்பில் கருத்து கூறுகின்றபோது, செய்திகளை வெளியிடுகின்றபோது, தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்புகள் ஏற்படாத வகையிலும், அப்பாவித் தமிழ் மக்கள்மீது பழியினைப் போடாத வகையிலும் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.