யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவ நோக்கிச் சென்ற பேருந்தில் குண்டு வெடிப்பு! (Video)

பயணிகள் பேருந்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திற்கு குண்டொன்று வெடித்ததே காரணம் என இராணுவத் தளபதி தனக்கு அறிவித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். கஹகொல்ல பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்றில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த வெடிப்பு சம்பவத்தில் பெண்கள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 07 இராணுவ வீரர்கள், 05 விமானப்படை வீரர்கள் மற்றும் 07 பொது மக்களும் அடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். காயமடைந்தவர்களில் இருவருடைய நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக பேருந்து முழுமையாக தீப்பற்றி எரிந்துள்ளது. எவ்வாறாயினும் இந்த வெடிப்பு சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்று இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவ நோக்கிச் சென்ற பேருந்து நேற்று இரவு பண்டாரவளை வரையில் வந்து, பின்னர் அதில் இருந்த பயணிகள் மற்றொரு பேருந்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு பயணிகள் மாற்றப்பட்ட பின்னர் பேருந்து கஹகொல்ல நோக்கி புறப்படும் போது இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.