ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

யாழ்.ஊர்காவற்துறை பிரதேசத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரை படுகொலை செய்தமை தொடர்பிலான குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு உள்ள சகோதரர்கள் இருவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது விளக்கமறியலில் தடுத்து வைக்கபட்டுள்ள இரு சந்தேக நபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

குறித்த வழக்கின் விசாரணையை கடந்த மாதம் 24ஆம் திகதி குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்ற நீதிமன்று உத்தரவிட்டு இருந்தது. அந்நிலையில் இதுவரையில் குற்றபுலனாய்வு பிரிவினர் விசாரணைகளை பொறுப்பெடுக்கவில்லை. அந்நிலையில் இன்றைய தினம் மன்றில் முன்னிலையான குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்த வழக்கினை பாரமேடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இருந்து இதுவரையில் தமக்கு அறிவுறுத்தல் கிடைக்கப்பெற வில்லை என மன்றில் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 07ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.