என்னை ஓரம் கட்டி தமது தேவைகளை மட்டும் நிறைவு செய்யும் நோக்கிலேயே தேர்தலிற்காக கூட்டிணைந்தவர்கள் தொடர்ந்தும் செயல்படுகின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
உள்ளூராட்சித் தேர்தலிற்கு பின்னர் உள்ள நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
தேர்தல் காலத்தில் வேட்பு மனுத் தயாரிப்பின்போதும் சரி அதன் பின்னரான காலத்திலும் என்னை ஓர் கிள்ளிக்கீரையாக மட்டுமே கருதினர். அதனால். என்னால் நியமிக்கப்பட்ட வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டு தமது எண்ணப்படியே வேட்பாளர்களையும் நியமித்தனர். ஒற்றுமைக்காக மௌனம் காத்தேன். அதன் பின்னர் தேர்தல் காலத்தில் எனது முதுமைக் காலத்திலும் முடிந்த்தைச் செய்து கணிசமான ஆசணங்களைப் பெற்றோம்.
தற்போது அவ்வாறு பெற்ற ஆசணங்களிற்கான உறுப்பினர்களை நியமிப்பதிலும் குழிபறிப்புக்களே இடம்பெற்று ஓரம் கட்டப்படுகின்றேன். அவ்வாறானால் 85 வயது முதியவர்தானே என்ற எண்ணமோ எனவும் தோன்றுகின்றது. ஏனெனில் வேட்புமனுவில் என் சார்பில் நியமிக்கப்பட்டவர்களை விகிதாசாரப் பட்டியலில் இருந்தும் ஓரம் கட்டும் முயற்சியே இடம்பெறுகின்றது. இதே நேரம் தேர்தல் காலத்தில் எந்த கருத்தும் தெரிவிக்காதவர்களும் எந்தப் பங்களிப்பும் செய்யாதவர்களும் தற்போது கருத்துக்கூறுவதற்கு முனைகின்றனர்.
எனவே இவை தொடர்பில் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி ஓர் இரு தினத்தில் விரிவான அறிக்கை ஒன்று வெளியிடப்படும். என்றார். –